பிரபல பின்னணிப் பாடகி கல்பனா ராகவேந்தர், ஹைதராபாத்தில் உள்ள இல்லத்தில் தற்கொலைக்கு முயன்றதாகத் தகவல் வெளியாகின. வீட்டில் சுயநினைவின்றி கிடந்த அவரை, அருகில் வீட்டில் குடியிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தாகவும், அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது.
இதற்கிடையில் குடும்பப் பிரச்னைக் காரணமாகதான் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு கொண்டார் என்று வதந்திகள் பரவின. இந்நிலையில் ‘என்னைப்பற்றியும் என் கணவரை பற்றியும் சோசியல் மீடியாவில் ஒரு தவறான வதந்தி பரவி வருகிறது. என் கணவர் குறித்தும் தவறான வதந்திகளை பரப்பாதீர்கள்” என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

`தவறான வகையில் பப்ளிசிட்டி’
தற்போது வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செய்தியாளர்களைச் சந்தித்து என்ன நடந்தது? என்பதைக் கூறியிருக்கிறார். “இந்த சம்பவத்தின் மூலம் தவறான வகையில் எனக்கு பப்ளிசிட்டி கிடைத்திருக்கிறது. முதலில் நான் தற்கொலை செய்ய முயற்சிக்கவே இல்லை. ஒவ்வொருத்தருக்கும் உடல்ரீதியாக ஒவ்வொரு பிரச்னைகள் இருக்கும். அதேபோல உடல்ரீதியாக எனக்கும் பல பிரச்னைகள் இருக்கிறது.
எனக்கு 45 வயது ஆகிறது. மெனோபாஸ் கட்டத்தை நெருங்கி இருக்கிறேன். ஒரு பெண் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் எவ்வளவு விஷயங்களை சுமந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துக் கொள்ளவதே இல்லை. ஒரு நல்ல செய்தி என்றால் 10 பேரைத் தான் சென்றடைகிறது. ஆனால் ஒரு அவதூறான செய்தி என்றால் 1000 பேரை சென்றடைகிறது.
இந்த வயதில் நான் சட்டப் படிப்பு படித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு ஜனவரி மாதத்தில் இருந்து நுரையீரல் பிரச்னை இருக்கிறது. அதோடுதான் நான் சில புரோகிராம்களுக்கு சென்று பாடிவந்தேன். நானும் ஒரு சாதரண மனுஷிதான். எனக்கும் பல பிரச்னைகள் இருக்கும். எனக்கு வாழ்க்கையில் நடந்த ஒரே நன்மை எனக்கு நல்ல கணவர் அமைந்ததுதான்.
என்னுடைய கணவர்தான் மிகவும் சப்போர்ட் செய்துக்கொண்டிருக்கிறார். பல வருடங்களாகவே எனக்கு உடல்ரீதியாகப் பிரச்னை இருக்கிறது. அன்றைக்கு வழக்கத்திற்கு மாறாக அதிகமான தூக்க மாத்திரையை எடுத்துக்கொண்டதால் மயங்கி விழுந்துவிட்டேன். என் கணவருடன் போனில் பேசிக்கொண்டிருக்கும்போதுதான் மயங்கி விழுந்தேன்.

அதனால் அவர் உடனே காவல்துறைக்கும், ஆம்புலன்ஸிற்கும் ஃபோன் செய்து வரவழைத்துவிட்டார். தற்போது உயிர்பிழைத்து நன்றாகத் தான் இருக்கிறேன். ஏன் எங்களைப் போன்ற பிரபலங்கள் மீது சேற்றை வாரி அடிக்கிறீர்கள். ஏன் தவறான செய்திகளைப் பரப்புகிறீர்கள். காதில் கேட்க முடியாத விஷயங்கள் எல்லாம் நம் நாட்டில் நடக்கிறது. அதைப் பற்றி எல்லாம் போடாமல் தவறான செய்திகளை யூடியூப் சேனல்கள் பதிவிடுகிறார்கள். தவறான செய்திகளைப் பரப்புவதால் மன உளைச்சல் ஏற்படுகிறது. ஏன் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்களை மட்டமாகப் பார்க்கிறீர்கள்” என்று ஆதங்கமாகப் பேசி இருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
