1992-ம் ஆண்டு சிறுவனாக இருக்கும் பாலசுப்பிரமணி, நடிகர் பிரபுதேவாவின் தீவிர ரசிகராக இருக்கிறான். வளர வளர அவரைப் போலவே உடை, தோற்றம், நடனம், உடல்மொழி எனத் தன்னை மாற்றிக்கொள்கிறான் பாலசுப்பிரமணி. பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது ஜானகி என்ற பெண், பாலசுப்பிரமணியை விரும்புகிறாள். ஆனால், பாலசுப்பிரமணி வேறு ஒரு பெண்ணை விரும்புவதால், அக்காதல் கைகூடாமல் போகிறது. மறுபுறம், பாலசுப்பிரமணியன் (இதுவும் பிரபு தேவாதான்… ஏதே?!) வளர்ந்து, கதாநாயகன் ஆகும் கனவோடு, கோடம்பாக்கத்தில் முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்.
மறுபுறம், பிரபல பாடகியான வேதிகாவுக்கும் பிரபல தாதாவான காசிமேடு மைக்கேலுக்கும் மோதல் வருகிறது. சிறிது நேரத்திலேயே அதே மைக்கேலுக்கும் பாலசுப்பிரமணிக்கும் மோதல் ஏற்படுகிறது. இருவரையும் துரத்துகிறார் மைக்கேல். இப்பிரச்னைகளைச் சமாளித்து, பாலசுப்பிரமணியன் ஹீரோ ஆனாரா என்பதோடு, பாலசுப்பிரமணிக்கும் வேதிகாவிற்கும் என்ன தொடர்பு என்பதுதான் படத்தின் கதை…
முழுப் படத்தையும் ஒன்மேன் ஆர்மியாக தோளில் தாங்கியிருக்கிறார் பிரபுதேவா. வழக்கம்போல நடனத்தில் பட்டையைக் கிளப்பியதோடு, ஆக்ஷனிலும் கலக்கியிருக்கிறார். குறும்பான உடல்மொழியும், வாய்ஸ் மாடுலேஷன்களும் வெகு சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கின்றன. ஏனைய இடங்களில்… “ஒருதடவ சிரிச்சா விட்றணும் மாஸ்டர்…” என நம்மைப் பொறுமி பொங்க வைக்கின்றன. உணர்வுபூர்வமான இடங்களில் தேவையான நடிப்பை வழங்கியதோடு, நடனத்திலும் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார் வேதிகா. ‘கலாபவன்’ ஷாஜோன் தொடக்கக் காட்சியில் மட்டும் மிரட்டுகிறார். விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக் ஆகியோர் குடியும் கையுமாக க்யூவில் வந்து, ‘யாரையும் சிரிக்க வைக்கக்கூடாது’ என்று சபதமேற்று, அதில் வென்று ‘சபத க்யூ’வாக நம் மனதில் நிற்கிறார்கள்! ஜெயபிரகாஷ், ரியாஸ் கான், மைம் கோபி, ராஜீவ் பிள்ளை, வையாபுரி என எல்லா துணை நடிகர்களும் ‘எந்தப் பயனுமில்லாமல்’ வந்து போகிறார்கள்.