இயக்குநர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா இயற்கையை எய்தியிருக்கிறார். இதயப் பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்த அவருக்கு திடீரென நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். அவரின் உடல் அவருடைய சேத்துப்பட்டு இல்லத்தில் இருந்து நீலாங்கரை இல்லத்திற்கு நேற்று இரவு கொண்டுச் செல்லப்பட்டது.

அவரின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. சூர்யா, விஜய், விஜய்சேதுபதி, சூரி உட்பட திரைப் பிரபலங்கள் பலரும் மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மனோஜ் பாரதிராஜாவுக்கு இயக்குநாரக வேண்டும் என்பதுதான் பெருங்கனவு. ஆனால், தனது தந்தையின் ஆசைக்காக ̀தாஜ்மஹால்’ படத்தில் நாயகனாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
இது குறித்து ஆனந்த விகடனுக்கு சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியில் மனோஜ், ̀̀என் தந்தைக்கு என்னை நடிகனாக்க வேண்டுமென ஆசை. அது பற்றி அவர் ̀எனக்கு நடிகனாக வேண்டும் என்றுதான் ஆசை இருந்தது. நான் பல கஷ்டங்களைச் சந்தித்தேன்.

என் நிழலை திரையில் பார்க்க வேண்டும்’ எனக் கூறினார். அப்பாவின் இந்த ஆசைக்காக நான் ̀தாஜ்மஹால்’ படத்தில் நடித்தேன். அதே சமயம் எனக்கு சினிமா மீது அதிகப்படியான காதலும் இருந்தது. பல சமயங்களில் ஏன் நமக்கு பெரிதளவில் வாய்ப்பு அமையவில்லை என்பதை எண்ணி மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறேன்.
சொல்லப்போனால், அப்போது எனக்கு தற்கொலை எண்ணங்களும் வந்திருக்கிறது. அதிலிருந்து என் மனைவி மற்றும் குழந்தைகளால்தான் மீண்டு வந்தேன்.” எனக் கூறியிருந்தார்.
இயக்குநாரக வேண்டும் என்ற கனவுடன் பல முயற்சிகளை கையில் எடுத்த மனோஜ் மணிரத்னமிடம் ̀பாம்பே’ திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணி புரிந்திருக்கிறார். இது மட்டுமல்ல, ̀எந்திரன்’ திரைப்படத்தில் இயக்குநர் ஷங்கருடனும் மனோஜ் பணிபுரிந்திருக்கிறார்.
̀நாம் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவிட்டோம். நான் ஏன் இன்னொரு நடிகருக்கு டூப்பாக இருக்க வேண்டும்’ எனத் துளியும் யோசிக்காமல் அதனை செய்திருந்தார்.

இப்படியான விஷயங்கள் சினிமா மீதான அவருடைய காதலை பிரதிபலிக்கிறது. இயக்குநராக வேண்டும் என்ற ஆசையோடு இருந்தவர் கடந்தாண்டு ̀மார்கழி திங்கள்’ என்ற படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார்.
இந்தப் படத்தை தாண்டி மனோஜ் பாரதிராஜாவுக்கு எப்படியாவது தன் தந்தை பாரதிராஜா இயக்கத்தில் கமல் நடித்திருந்த ̀சிகப்பு ரோஜாக்கள்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துவிட வேண்டும் என ஆசை இருந்திருக்கிறது.
அதற்கான கதையை தயார் செய்துவிட்டு பல தயாரிப்பாளர்களையும் தேடியிருக்கிறார் மனோஜ். ஆனால், பல்வேறு காரணங்களால் அத்திரைப்படம் தடைபட்டுப் போனது. சிம்புவை கதாநாயனாக இப்படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என மனோஜ் யோசித்ததாகவும் அப்போது தகவல்கள் வெளியாகின.
அதன் பிறகு 2015-ம் ஆண்டு ரஜினிகாந்தின் மருமகனும், செளந்தர்யா ரஜினிகாந்தின் கணவருமான விசாகனை கதாநாயனாக வைத்து இப்படத்தைத் தொடங்கினார் மனோஜ். அப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் அப்போது வெளியிட்டிருந்தார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாகவும் அப்போது அறிவித்திருந்தனர்.

ஆனால், மீண்டும் பல்வேறு காரணங்களால் அத்திரைப்படம் நடக்காமல் தடைபட்டது. இத்திரைப்படம் குறித்து இவர் கடைசியாக அளித்த நேர்காணலில், `அத்திரைப்படத்தை நான் எப்போது தொடங்கினாலும் ஏதாவது ஒரு தடை வந்துக் கொண்டே இருந்தது. ஏதோ ஒரு ஜின்க்ஸ் இருந்ததுபோலவே தெரிந்தது. இப்போதும் அந்தக் கதை ஃப்ரஸாகதான் இருக்கிறது.” எனக் கூறியிருந்தார். எப்படியாவது இத்திரைப்படத்தை எடுத்தாக வேண்டும் என்கிற மனோஜின் இந்த ஆசை பல போராட்டங்களுக்குப் பிறகும் நிறைவேறவே இல்லை