ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபு விஜய், இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். பிவி பிரேம்ஸ் சார்பில் பாபு விஜய் தயாரிக்கும் இதில், மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, ‘கேஜிஎஃப்’ கருடா ராம், மன், ஆதித்யா கதிர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். முக்கிய சமூக பிரச்சினை ஒன்றை, காதலும் த்ரில்லரும் கலந்து, கமர்ஷியல் அம்சங்களுடன் இப்படம் பேசுகிறது.
ஒருவன் வாழ்வில் அடுத்தடுத்து ஏற்படும் ஆச்சரிய மாற்றங்கள், அதிர்வுகள் தான் இக்கதையின் மையம். நம் நாட்டில் தொடர்ந்து நிகழப்போகும் பெரும் ஆபத்தை இப்படம் சொல்ல இருப்பதாகப் படக்குழு கூறுகிறது. இந்தப் படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர் தனஞ்செயன் கிளாப் அடித்தும் இயக்குநர் சசி, கேமராவை ஆன் செய்தும் தொடங்கி வைத்தனர்.