பெங்களூரு: கர்நாடக அரசு வழங்கிய சிறந்த நடிகருக்கான விருதினை நிராகரித்து, மன்னிப்புக் கோரியிருக்கிறார் கிச்சா சுதீப்.
2019-ம் ஆண்டிற்கான கன்னட திரைப்பட விருதுகளை அறிவித்துள்ளது கர்நாடக அரசு. அதில் ‘பயில்வான்’ படத்தில் சிறப்பாக நடித்ததிற்காக சுதீப்புக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், அந்த விருதினை நிராகரிப்பதாக சுதீப் அறிவித்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இது குறித்து சுதீப் தனது எக்ஸ் தளத்தில் “சிறந்த நடிகர் பிரிவில் மாநில விருது பெற்றது பெருமையாக இருக்கிறது. இந்த மரியாதையை அளித்துள்ள ஜூரி உறுப்பினர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இருப்பினும் நான் சில ஆண்டுகளாக விருதுகள் பெறுவதை தவிர்த்து வருகிறேன். இது பல தனிப்பட்ட காரணங்களுக்காக எடுத்த முடிவு. அதை இப்போதும் பின்பற்றி வருகிறேன்.
பல தகுதியான நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களை கலைக்கு அர்ப்பணித்துள்ளவர்கள். அவர்களுக்கு இந்த மரியாதை சென்றால் எனக்கு பெரும் மகிழ்ச்சியை தரும். நான் பெரும் மகிழ்ச்சியடைவது அவர்கள் இந்த விருதை பெரும் போது தான். மக்களை கவர்வதில் தான் அர்ப்பணிப்பு இருக்கிறதே தவிர விருதுகளுக்கான எதிர்பார்ப்புகளுடன் அல்ல. இந்த விருதானது என்னை மிகுந்த மகிழ்ச்சியடைச் செய்கிறது. மேலும், சிறந்த முயற்சியை மேற்கொள்ளும் முனைப்பையும் அளிக்கிறது.
எனை தேர்வு செய்த ஜூரி உறுப்பினர்களுக்கு நன்றி. அதே வேளையில் என் முடிவினால் ஏற்படும் எந்தவொரு விரக்திக்கும் ஜூரி உறுப்பினர்களிடமும் மாநில அரசிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். எனது முடிவை மதித்து, நான் போகும் பாதையில் ஆதரவாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Respected Government of Karnataka and Members of the Jury,
It is truly a privilege to have received the state award under the best actor category, and I extend my heartfelt thanks to the respected jury for this honor. However, I must express that I have chosen to stop receiving…
— Kichcha Sudeepa (@KicchaSudeep) January 23, 2025