29.03.2025 அன்று சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு (திருக்கணிதப் பஞ்சாங்கப்படி) மாறுகிறார். மீன ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 03.06.2027 வரை இரண்டரை காலத்துக்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். மீன ராசியில் இருந்து தனது மூன்றாம் பார்வையால் ரிஷப ராசியையும், ஏழாம் பார்வையால் கன்னி ராசியையும், பத்தாம் பார்வையால் தனுசு ராசியையும் பார்க்கிறார். மேஷம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே…
மிதுனம்: மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், மரியாதை கொடுக்கும் மிதுன ராசி அன்பர்களே! நீங்கள் எதிலும் அறிவார்ந்து செயல்படுபவர். வெளிவட்டாரப் பழக்கங்களை விரும்பும் தாங்கள் ஒரு சிறந்த பண்பாளர். இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பார்ப்போம்.
கிரகநிலை: இதுவரை உங்களது பாக்கிய ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி தொழில் ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் அயன சயன போக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் சுக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் களத்திர ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
பலன்கள்: இடம் பெயரும் கர்மகாரகன் சனியால் உங்களின் பொருளாதார நிலை மேம்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். பொதுநலக் காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணம் தடைபட்டவர்களுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் கைகூடும். குழந்தை இல்லாதோர்க்கு மழலைச் செல்வம் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். உபய ராசியில் சஞ்சரிக்கப் போகும் சனி பகவானால் மகிழ்ச்சி தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். அதன் மூலம் வருமானமும் பெருகும்.
உங்கள் செயல்களை நேர்மையான பாதையில் செவ்வனே செய்து முடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். பங்குச் சந்தை முதலீடு போன்ற இனங்கள் மூலம் திடீர் பண வரவு உண்டாகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். தர்ம காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். நல்ல குருநாதரிடம் தீட்சை பெறும் பாக்கியமும் உண்டாகும்.
உடல்நலனைப் பொறுத்தவரை பலருக்கு சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாமல் பணிகள் கசக்கிப் பிழியக் கூடும். இதனால் உடலில் அவ்வப்போது சோர்வு உண்டாகும். போட்டிகளைச் சமாளிப்பீர்கள். கடினமான காரியங்களையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பீர்கள். உங்களின் உடல் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி பெறுவீர்கள். உங்கள் நடையில் மிடுக்கு உண்டாகும். அவ்வப்போது சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும்.
வசிக்கும் வீட்டை பழுது பார்ப்பதற்குச் சிறிது செலவு செய்ய நேரிடும். மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் அவற்றை சாதுர்யமாகச் சமாளிக்க சனி பகவான் உதவுவார். சிலர் புதிய இல்லங்களுக்கு மாறுவார்கள். உங்களுக்கு பேராற்றல் உண்டாகும். புதிய தொழில் நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். சாமர்த்தியசாலி என்று பெயர் எடுப்பீர்கள். உற்றார், உறவினர்கள் உங்களுக்கு உதவிகரமாக நடந்து கொள்வார்கள். நல்ல செய்திகள் உங்களை வந்தடையும். இதனால் மகிழ்ச்சிக் கடலில் திளைப்பீர்கள்.
உத்யோகஸ்தர்கள் கடின உழைப்பைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயலாற்றவும். சுணக்கத்திற்கும் சோம்பலுக்கும் இடம் கொடுக்காமல் பணியாற்றினால் மேலதிகாரிகளின் ஆதரவை எளிதில் பெறலாம். எப்போதும் நிதானமாகவே பேசி சக ஊழியர்களின் அன்பைப் பெறவும். இதற்குப் பயனும் உண்டு. உங்கள் உடல் உழைப்பிற்கு மேல் இரண்டு மடங்கு வருமானத்தைக் காண்பீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களும் பலன் தரும்.
வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடிவடைந்தாலும் உங்கள் செயல்களில் கூடுதல் அக்கறை காட்டவும். மற்றபடி சமுதாயத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். புதிய சந்தைகளைத் தேடிச் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புதிய முதலீடுகளையும் துணிந்து செய்யலாம்.
அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிக் குறை சொல்வதைக் குறைத்துக் கொள்வார்கள். தொண்டர்கள் உங்கள் பெருமைகளைப் புரிந்து கொள்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் மனதிற்கினிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். கட்சிப் பிரச்சாரங்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். அதேசமயம் எவரையும் குறைத்து மதிப்பிடாமல் செயலாற்றவும்.
கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கவுரவமும் கட்டாயம் கிடைக்கும். பண வரவில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். அமைதியாகச் செயலாற்றுவீர்கள். சில விரையங்களும் அவ்வப்போது உண்டாகும் என்பதால் சேமிப்பு விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.
பெண்களுக்குக் கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். அதே சமயம்
குடும்பத்தில் உங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் நடந்து கொண்டு அமைதி காப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
மாணவமணிகள் புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள். நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்பு உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று பாராட்டைப் பெறுவீர்கள். உடற்பயிற்சிகளை மேற்கொண்டு சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பெற்றோர்களின் அறிவுரைப்படி நடந்துகொண்டு மேலும் சிறப்படையுங்கள்.
மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள்: எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். பணவரத்து மனமகிழ்ச்சியைத் தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினை குறையும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும்.
திருவாதிரை: உங்கள் வாக்குவன்மையால் நன்மை ஏற்படும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும்.
புனர்பூசம் – 1, 2, 3 பாதங்கள்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு, வீண் அலைச்சல் குறையும். எதிர்பார்த்த அதிகாரம் அந்தஸ்து கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
பரிகாரம்: புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் ஆலயத்திற்கு செல்லுங்கள். முடிந்தவர்கள் பாடல் பெற்ற ஸ்தலங்களுக்கும் செல்லலாம். செல்வங்கள் குவியும். தாமரை மலரை அருகிலிருக்கும் பெருமாளுக்கு அர்பணியுங்கள், அவர் எல்லாவற்றையும் சீராக நடத்திவைப்பார். | சனிபகவான் பார்வைகள்:
– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |