மாரி செல்வராஜ் இயக்கி வந்த ‘பைசன் காளமாடன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றதாக படக்குழு அறிவித்துள்ளது.
‘மாமன்னன்’ படத்திற்குப் பிறகு துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார் மாரி செல்வராஜ். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி பகுதிகளில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சென்னையில் கபடி போட்டி நடைபெறுவது போன்று அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வந்தார்கள். தற்போது அத்துடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுற்றதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
’பைசன் காளமாடன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா, ஒளிப்பதிவாளராக எழில் அரசு ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.
இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனை முடித்துவிட்டு அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தினை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ‘பைசன் காளமாடன்’ பட வெளியீட்டுக்கு பின்பே வெளியாகவுள்ளது.