கடந்த ஆண்டு நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப் தொடர்பான ‘டீப் ஃபேக்’ வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. ஏஐ தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் இந்த ‘டீப் ஃபேக்’ மூலம் அச்சு அசலாக உண்மைக்கு நெருக்கமானது போன்ற போலியான போட்டோக்கள், வீடியோக்களை உருவாக்க முடியும். இது கவலை அளிக்கும் போக்காக இருப்பதாக அப்போதே விவாதங்கள் நடந்தன. இதையடுத்து சில காலம் அடங்கிக் கிடந்த இந்த விஷயம் இப்போது மீண்டும் தலையெடுத்துள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர்களான தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் தம்பதிக்கு கடந்த செப்டம்பரில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ‘துவா’ எனப் பெயர் சூட்டியிருப்பதாக அறிவித்தவர்கள், போட்டோக்கள் எதையும் பகிராமல் இருந்தனர்.
ஆனால், ஏஐ தொழில்நுட்பத்தில் தீபிகா, ரன்வீர், துவா ஆகியோரின் குடும்பப் படங்களை போலியாக உருவாக்கி இணையத்தில் சிலர் பகிர்ந்துள்ளனர். ‘இது போலியான படங்கள், லைக்ஸ்களுக்காக இப்படியெல்லாம் செய்கிறார்கள்’ என்று விவரமான நெட்டிசன்கள் கொதித்தாலும், உண்மையென நம்பி ஷேர் செய்பவர்களின் அலப்பறைகளும் தொடர்கிறது! – மார்க்கி