விஜய் நடித்த ‘கத்தி’ படத்தில் வில்லனாக நடித்தவர், இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இந்தியன் என்பதை நம்பாமல் தடுத்து வைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “படப்பிடிப்பு ஒன்றுக்காக நியூயார்க் சென்றிருந்தேன். அப்போது விமான நிலையத்தில் என்னைத் தடுத்துவிட்டார்கள். நான் இந்தியன் என்பதையும், எனது இந்திய பாஸ்போர்ட்டையும் அவர்கள் நம்பவில்லை. என்னைப் பதிலளிக்க விடாமல் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
சுமார் 4 மணி நேரம் விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டேன். அதன் பிறகு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்றார்கள். என் பெயரை கூகுள் செய்து பாருங்கள் என்றேன். பிறகு தங்கள் தவறை உணர்ந்த அவர்கள், என் அப்பா, தாத்தா குறித்து கேட்கத் தொடங்கி பிறகு விட்டுவிட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இவரின் தாத்தா, இந்தியில் பிரபல பின்னணி பாடகர் முகேஷ். இவரின் தந்தை நிதின் முகேஷும் பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது.