திருமணம் குறித்த கருத்தால் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் தமன். சமீபத்தில் ‘பாட்காஸ்ட்’ ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார் தமன். அதில் திருமணம் குறித்து அவர் கூறிய கருத்துகள்தான் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
அந்தப் பேட்டியில் தமன், “இப்போதைக்கு யாருமே திருமணம் செய்ய வேண்டாம் என்றே நான் நினைக்கிறேன். பெண்களுக்கும் இப்போது வாழ்வில் சுதந்திரம் தேவைப்படுகிறது என்பதால் சூழல் மிகவும் கடினமாக மாறியுள்ளது. அவர்கள் யாரின் கட்டுப்பாடிலும் இருக்க விரும்பவில்லை. எனவே நம் சமூகத்தில் அப்படி ஓர் அரிதான பெண்ணை நம்மால் காண முடியாது.
கோவிட்டுக்கு பிறகு எல்லாம் மாறிவிட்டது. இன்ஸ்டாகிராமும் அந்த அழிவுக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று என நினைக்கிறேன். நான் சரியான வார்த்தைகளில் பேசுகிறேனா என்று தெரியவில்லை. ஏனென்றால், அதில் நாம் அழகான விஷயங்களை மட்டுமே பகிர்கிறோம். அதற்கு பின்னால் இருக்கும் போராட்டங்களை அல்ல. ஆனால், இப்போதைக்கு திருமணம் செய்யுங்கள் என்று நான் பரிந்துரைக்க மாட்டேன்.
எதிர்ப்பார்ப்புகளை புரிந்துகொள்வது மிகக் கடினமாக மாறிவிட்டது. அன்றாடம் நிறைய விவாகரத்துகள் நடப்பதைப் பார்க்கிறேன். மிகவும் சாதாரணமாகிவிட்டது. யாருக்கும் சமரசம் செய்ய விருப்பமில்லை” என்று தெரிவித்துள்ளார் தமன். இந்த கருத்துகள்தான் இப்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.