மதுரை: திருப்பரங்குன்றம் மலை குறித்து சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட வழக்கில் சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவில், “இந்து முன்னணி அமைப்பில் உள்ளேன். அறுபடை வீடு நமது என்று சொல்லி மீசைய முறுக்கு, இந்துக்களே புறப்படுவோம், என்று திருப்பரங்குன்றம் மலையுடன் ஒரு வாசகம் அடங்கிய பதிவை பாடலுடன் எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தேன்.
இந்த பதிவு, மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் உள்ளது எனக் கூறி என் மீது மதுரை சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
என் மீது தவறான நோக்கத்துடன் பொய் வழக்குப் பதியப்பட்டுள்ளது. நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவேன், எனவே, எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்,” என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சக்திவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், முன் ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து, தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மார்ச் 4 வரை கனல் கண்ணனை போலீஸார் துன்புறுத்தக் கூடாது என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.