தமிழ்த் திரைப்படத்துறை ஆளுமை, தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர் எனப் பல அடையாளங்களைக் கொண்டவர் கலைப்புலி ஜி.சேகரன். தனது சினிமா கரியரை வினியோகஸ்தராகத் தொடங்கிய ஜி.சேகரன், அடுத்தகட்டமாக தயாரிப்பாளர் எஸ்.தாணுவுடன் இணைந்து கலைப்புலி பிலிம்ஸின் பங்குதாரரானார்.

தயாரிப்பாளர் அவதாரத்தைத் தொடர்ந்து, 1985-ல் எஸ்.தாணு தயாரிப்பில் அர்ஜுன் நடிப்பில் வெளியாகி 100 நாள்கள் ஓடி பெரும் வெற்றிபெற்ற ஹாரர் படமான `யார்?” படத்தின் மூலம் நடிகராகவும் ஜி.சேகரன் உருவெடுத்தார். அங்கிருந்து, திரைப்படம் இயக்கம் பக்கம் திரும்பிய ஜி. சேகரன், 1988-ல் `ஊரைத் தெரிஞ்சிகிட்டேன்’ படத்தை இயக்கினார். அப்படத்தைத் தொடர்ந்து, ‘காவல் பூனைகள்’, ‘உளவாளி’ ஆகிய படங்களை இயக்கினார்.

இவற்றோடு விநியோகஸ்தர் சங்க தலைவர், சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து குரல் கொடுப்பது என தமிழ்த் திரைப்படத்துறையில் பன்முகத் திறமை கொண்ட ஆளுமையாக விளங்கினார். இந்த நிலையில், ஜி. சேகரன் (73) உடல்நலக் குறைவு காரணமாக இன்று (ஏப்ரல் 13) மதியம் உயிரிழந்தார். அவரின் இறப்புக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக, ராயப்பேட்டையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று மலை 5 மணி முதல் வைக்கப்படவுள்ளது.