நாக சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் படம் ‘தண்டேல்’. சந்து மொண்டட்டி இயக்கியுள்ளார். கீதா ஆர்ட்ஸ் மூலம் பன்னி வாஸ் தயாரித்துள்ள இப்படத்தை அல்லு அரவிந்த் வழங்குகிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிடு கிறது. உண்மைச் சம்பவ அடிப்படையில் உருவாகும் இந்தப் படம் வரும் 7-ம் தேதி வெளியாகிறது. இதன் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.
தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் பேசும்போது, ‘‘இந்தப் படத்துக்காக நாக சைதன்யாவும் சாய் பல்லவியும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். தரமான படைப்பாக ‘தண்டேல்’ உருவாகி இருக்கிறது. இதன் கதை சிறியதுதான். ஆனால் அதை இயக்குநர் வழங்கிய விதம் சிறப்பானது. இந்தப் படத்தின் கதைக்காக 20 பேரிடம் ரைட்ஸ் வாங்கி இருக்கிறோம். அவர்கள் பாகிஸ்தான் சிறையில் கைதியாக இருந்து விடுதலையானவர்கள். அவர்களின் கதை இது. இயக்குநர் அதை 2 மணி நேர கதையாக விவரித்திருக்கிறார்.
அதை அற்புதமான படைப்பாக உருவாக்கியதற்காக இயக்குநர் சந்துவுக்கு நன்றி. இந்தப் படத்தின் மூலம் கருணாகரன் தெலுங்கில் அறிமுகமாகிறார். படத்தில் அவருடைய நடிப்புப் பேசப்படும்” என்றார்.நாக சைதன்யா, சாய் பல்லவி, நடிகர் கார்த்தி, ஆடுகளம் நரேன், இயக்குநர்கள் வெங்கட் பிரபு, கார்த்தி சுப்புராஜ் கலந்து கொண்டனர்.