பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
‘சலார்’ படத்துக்குப் பிறகு ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமானார் பிரசாந்த் நீல். இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க பணிகளைத் தொடங்கினார்கள். நீண்ட நாட்களாகவே இதன் நடிகர்கள் ஒப்பந்தம் மற்றும் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.
இன்று (பிப்.20) முதல் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஜூனியர் என்.டி.ஆர் கலந்துக் கொள்ளவில்லை. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தான் தொடங்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்றிணை வெளியிட்டு படக்குழு உறுதிப்படுத்தி இருக்கிறது.
இதில் ருக்மணி வசந்த், டொவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்கள். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னும் படக்குழு அறிவிக்கவில்லை. இப்படத்துக்கு ‘டிராகன்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்தப் படத்தினை முடித்துவிட்டு தான் ‘சலார் 2’ படத்தை இயக்கவுள்ளார் பிரசாந்த் நீல்.