பழம்பெரும் நடிகை சிஐடி சகுத்தலாவின் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் நாடகங்களில் அறிமுகமாகி அதன் பிறகு சினிமாவில் நுழைந்து, தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளிலும் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சிஐடி சகுந்தலா. இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக இன்று பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 84.
சேலத்தைச் சேர்ந்த இவர் புகழ்பெற்ற பல படங்களில் நடித்திருக்கிறார். மார்டன் தியேட்டர்ஸ் தயாரிப்பான சிஐடி சங்கர் படத்தில் ஜெய்சங்கர் ஜோடியாக நடித்ததன் மூலம் `சிஐடி’ என்கிற அடைமொழியைப் பெற்றார்.
டான்ஸர் குணச்சித்திர நடிகை பிறகு கதாநாயகி எனப் படிப்படியாக உயர்ந்தவர்.
சிவாஜி கணேசனுடன் தில்லானா மோகனாம்பாள், பாரத விலாஸ், வசந்த மாளிகை முதலான பல படங்களில் நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆருடனும் பல படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகித்திருக்கிறார்.
பிறகு ஒரு காலகட்டத்தில், சினிமாவிலிருந்து ஒதுங்கிய பிறகு சீரியல் பக்கம் வந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிப்புக்கு ஓய்வு தந்து பெங்களூரு வில் வசித்து வரும் மகள் வீட்டுக்கு சென்றவர் அங்கேயே தங்கி இருந்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக வயோதிக பிரச்சனைகளைச் சந்தித்து வந்தவருக்கு இன்று நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. அது குறித்து அவரின் மகள் செல்வி,
“மதியம் 3 மணிக்கு மருத்துவமனைக்கு கூட்டிப் போனோம். ஆனா போன கொஞ்ச நேரத்திலேயே அம்மா உயிர் பிரிந்தது” என வேதனையுடன் தெரிவித்தார்.
சகுந்தலாவின் உடல் நாளை அடக்கம் செய்யப்படுகிறது.