இனியன் ஜெ. ஹரீஷின் ஒளிப்பதிவு, மாங்கொல்லை கிராமத்தின் ஈரத்தையும், பசுமையையும் கடத்தியிருக்கிறது என்றாலும், இரவு நேரக் காட்சிகளில் நேர்த்தியும், தெளிவும் இல்லாமல் போவது படத்திற்கு மைனஸ். கதைக்குள் நுழையவிடாமல் தடுக்கும் முதல் பாதியைக் கருணையின்றி கழற்றிவிடத் தவறுகிறது ஶ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பு. ஆத்தங்குடி இளையராஜாவின் இசை, வரிகள் மற்றும் குரலில் ‘அடியே புட்ட வெச்ச ரவிக்கைக்காரி…’ பாடல் சிறிது துள்ள வைக்கிறது. சித்துகுமாரின் இசையில் ‘படிச்சிக்குறோம்’ பாடல் ஓகே ரகம். ஆனால், அவரின் பின்னணி இசை பெரிதாகக் கைகொடுக்கவில்லை. கதைக்களத்தைக் கட்டமைக்க பாரதி புத்தாவின் கலை இயக்கம் பெரிதும் உதவியிருக்கிறது.
மூன்று தலைமுறைகளாக வாத்தியார்களைக் கொண்ட ஒரு குடும்பத்தைக் கதைக்கருவாக வைத்து, ஒடுக்கப்பட்டவர்களுக்குக் கல்வி கிடைப்பதைத் தடுக்க, மதம், சாதி, கடவுள் போன்றவற்றின் பெயரில் நடக்கும் அநீதிகளைக் கேள்வி கேட்டிருக்கிறார் இயக்குநர் போஸ் வெங்கட். அதற்கு ஏதுவாக, சுகுணா திவாகரின் வசனங்கள் சமூக அநீதியைப் பிரம்பைக் கொண்டு விளாசுகின்றன. ஆனால், மாங்கொல்லை கிராமம், அண்ணாதுரை வாத்தியாரின் தற்போதைய நிலை, பொன்னரசன் வாத்தியாரின் குறிக்கோள், ஆதிக்கச் சாதியினரின் அடக்குமுறை, ஆணவக் கொலை எனத் தொடக்கத்தில் கதைக்கான முன்னுரை விளக்கப்பட்டு, சிறிது சிறிதாகத் திரைக்கதை விரியத் தொடங்கியவுடன், காதல் காட்சிகள், பாடல்கள், காமெடி காட்சிகள் எனப் பல பென்ச்கள் குறுக்கே வேகத்தடையாகப் போடப்படுகின்றன. ஒரு மணிநேரம் போராடி இவற்றை விலக்கிவிட்டு, படத்தின் கதையைக் கண்டடைவதற்குள் படத்தின் இடைவேளையே வந்துவிடுகிறது.