மீண்டும் காமெடியனாக நடிக்க வேண்டும் என்று சந்தானத்துக்கு இயக்குநர் சுந்தர்.சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘மதகஜராஜா’. இது அனைத்து பிரச்சினைகளையும் கடந்து 13 ஆண்டுகள் கழித்து வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் சந்தானத்தின் காமெடிக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
படம் குறித்து பத்திரிகையாளர்கள் மத்தியில் சுந்தர்.சி பேசும்போது, “13 ஆண்டுகளாக இந்த நாளுக்காக தான் காத்திருந்தோம். இன்று அனைவரும் இப்படத்தை சிரித்து ரசித்து பார்க்கும் போது, இதை விட சிறந்த பொங்கல் பரிசு எதுவுமே இருக்காது. இப்படம் ஆரம்பிக்கும் போதெ பொங்கல் வெளியீடு என்று தான் தொடங்கினோம். லேட்டாக வந்தாலும் பொங்கலுக்கு லேட்டஸ்டாக வந்திருக்கிறது. குறைந்தது 15 நிமிடமாவது உங்களை மனம் விட்டு சிரிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
சந்தானத்தை எவ்வளவு மிஸ் பண்றேன் என்பதை ‘மதகஜராஜா’ படம் பார்த்தால் தெரியும். அவர் பெரிய நாயகனாகிவிட்டார். அவருக்கு ஒரு வேண்டுகோள். அவரை காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும். அவரை ரொம்பவே மிஸ் பண்றோம். இதைக் கேட்டால் சந்தானம் கோபித்துக் கொள்வார். மிஸ் யூ சந்தானம்” என்று தெரிவித்துள்ளார்.
சந்தானம், மறைந்த இயக்குநர் மனோபாலா, வரலட்சுமி, அஞ்சலி, சோனு சூட் உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்துள்ளனர். ஜெமினி நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் 13 ஆண்டுகள் கழித்து வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.