மும்பை: பிரபல இந்தி நடிகர் சல்மான் கான். இவர் கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்தானுக்குப் படப்பிடிப்புக்குச் சென்றபோது, அரிய வகை மான்களை வேட்டையாடியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பிஷ்னோய் இன மக்கள், அந்த அரியவகை மான்களைப் புனிதமாகக் கருதுகின்றனர். இதனால் பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்த கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல், சல்மான்கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறது.
மும்பை பாந்த்ராவில் உள்ள சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் முடிந்து ஒரு வருடம் நிறைவடையும் நிலையில், மும்பை வொர்லியில் உள்ள போக்குவரத்துத் துறையின் வாட்ஸ் அப் உதவி எண்ணுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது.
அதில், சல்மான் கானின் காரை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என்றும் வீட்டுக்குள் புகுந்து அவரை கொல்வோம் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பை போலீஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.