உண்மைச் சம்பவப் பின்னணியில் உருவாகியுள்ள படம், ‘சாட்சி பெருமாள்’. மதன் கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தில் அசோக் ரங்கராஜன், வி.பி.ராஜசேகர், பாண்டியம்மாள், எம்.ஆர்.கே., வீரா உட்பட பலர் நடித்துள்ளனர். மஸ்தான் இசை அமைத்துள்ளார்.
படத்தை இயக்கியுள்ள ஆர்.பி.வினு கூறும்போது, “பத்திரப் பதிவு அலுவலகங்களில் எப்போதும் சாட்சி கையெழுத்துப் போடுபவர்கள் இருப்பார்கள். அப்படி ஒருவரின் கதைதான் இது. அவர் குடும்பத்தில் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. அதை எப்படித் தீர்க்கிறார் என்று கதை செல்லும். என் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களின் பாதிப்பில் இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறேன்.
இதில் முதன்மை பாத்திரத்தில் அசோக் ரங்கராஜன் நடித்துள்ளார். ராஜசேகர், பாண்டியம்மாள் உள்பட அனைவரும் சிறந்த நடிப்பை வழங்கி இருக்கிறார்கள். பெரியகுளம், அகமலையில் படப்பிடிப்பை முடித்துள்ளோம். யதார்த்தமான இந்தப் படத்தைப் பட விழாக்களுக்காகவே உருவாக்கினேன்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த திரைப்பட விழாக்களில் பங்கேற்று 12 விருதுகளைப் பெற்றிருக்கிறது. மேலும் சில பட விழாக்களுக்கு அனுப்ப இருக்கிறோம். ஒரு மணி நேரப் படமான இது, விரைவில் ஓடிடி-யில் வெளியாக இருக்கிறது” என்றார்.