மும்பை செம்பூரில் உள்ள பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது நேற்று இரவு நடந்தது.
இவ்விழாவில் நடிகை சுஹாசினி உட்பட மொத்தம் 8 பேருக்குப் பல்வேறு துறைகளில் சாதித்ததற்காக எப்.ஏ.எஸ்.ஸ்ரீ ரத்னா விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். முதலில் மோகினி ஆட்டத்தில் சிறந்து விளங்கும் கலாமண்டலம் சேமாவதிக்கு விருது வழங்கப்பட்டது. பத்மஸ்ரீ உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள சேமாவதி மும்பையில் விருது பெற்ற அனுபவம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். பரதநாட்டிய கலைஞர் மாளவிகா, நியூ இந்தியா அஸ்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிரிஜா சுப்பிரமணியம், நடிகை சுஹாசினி மணி ரத்னம் உட்பட மொத்தம் 8 பேருக்கு இவ்விருது வழங்கப்பட்டன.
இவ்விருதைப் பெற்றுக்கொண்ட பிறகுப் பேசிய சுஹாசினி, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உட்பட 5 தென்னிந்திய மாநிலங்களை இங்கு ஒரே இடத்தில் பார்க்கிறேன் என்று மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார். தனது சிறு வயதில் தனது சித்தப்பா கமல்ஹாசன் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்குத் தன்னை அழைத்துச்சென்று படத்தயாரிப்பு முறைகளைக் கற்றுக்கொடுத்ததாகத் தனது இளம் வயது அனுபவங்களைச் சுஹாசினி வ்பகிர்ந்து கொண்டார்.
அதோடு தான் படத்தில் நடிக்க அனுமதி கொடுத்து தன்னை தனது தந்தை ஊக்கப்படுத்தியதையும், சொந்த ஊரான பரமக்குடி அரசுப் பள்ளியில் படித்த அனுபவம் குறித்து விழாவில் கலந்து கொண்டவர்களுடன் சுஹாசினி பகிர்ந்து கொண்டார். விருது கொடுக்கும் நிகழ்ச்சி முடிந்த பிறகு பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி சார்பாக நடத்தப்படும் இசை மற்றும் பரதநாட்டிய பள்ளி மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடந்தது.