சென்னை: ஒட்டுமொத்த கலைக்கும் ஒரு மரியாதையை கொண்டு வந்தவர் இளையராஜா என்று ஏ.ஆர்.ரஹ்மான் சிலாகித்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மான் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் இளையராஜா குறித்து கூறியதாவது: “இளையராஜாவிடம் நான் வேலை செய்த காலத்தில், சுற்றி இருந்த எல்லாரும் தண்ணி அடிப்பார்கள். அவர்களை வீட்டுக்கு கொண்டு போய் சேர்க்கவே ஒரு ஆள் தேவைப்படும். ஆனால் அப்படி இருந்த சூழலை மாற்றி, ஒட்டுமொத்த கலைக்கும் ஒரு மரியாதையை கொண்டு வந்தவர் இளையராஜா. நிச்சயமாக அவருடைய இசையை பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இசையையும் தாண்டி எனக்கு அவரிடம் மிகவும் பிடித்த விஷயம் அது. இளையராஜாவிடம் நீ வாசிக்கிறாயா? என்று பலரும் கேட்கும் வகையில் ஒருவித மரியாதையை அவர் கொண்டு வந்தார்” இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. இந்தப் படத்தில் யோகிபாபு, வினய், ஜான் கொக்கன், லட்சுமி ராமகிருஷ்ணன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ஜன.14 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.