நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம் கத்தி. இந்தப் படத்தில் வில்லனாக நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ். இவர் சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார். அதில், அமெரிக்கா விமான நிலையத்தில் அவர் கைதுசெய்யப்பட்டது தொடர்பான தகவலைப் பகிர்ந்து கொண்டார். “நான் அமெரிக்காவின் நியூயார்க்கில் ஒரு படம் நடிப்பதற்காகச் சென்றிருந்தேன். அப்போது நியூயார்க் விமான நிலையத்தில் என்னைத் தடுத்துவிட்டார்கள். நீ யார்? எங்கிருந்து வருகிறாய் என அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றார்கள். நான் என் இந்திய பாஸ்போர்ட்டைக் காண்பித்தேன். அப்போதும் அவர்கள் அதை நம்பவே இல்லை.
என்னைக் கேள்விக்கேட்டுக்கொண்டே இருந்தார்கள். ஆனால், நான் பதிலளிக்க அனுமதிக்கப்படவே இல்லை. கிட்டத்தட்ட 4 மணி நேரம் என்னைக் கைது செய்து விசாரித்தார்கள். ஒருகட்டத்தில் என்னைக் குறித்து கூகுளில் தேடும்படிக் கேட்டுக்கொண்டேன். அப்போதுதான் அவர்கள் தங்கள் தவறை உணரத் தொடங்கினார்கள். அதன்பிறகு என் அப்பா, என் தாத்தா குறித்தெல்லாம் கேட்டுவிட்டு அதை உறுதி செய்த பிறகுதான் விடுவித்தார்கள்.” என்றார்.
நடிகர் நீல் நிதின் முகேஷின் குடும்பம் இசைக் கலைஞர்கள் பின்னணியைக் கொண்டது. இவரின் தாத்தா பாலிவுட்டின் பிரபலமான பின்னணி பாடகர். இவரின் தந்தையும் பின்னணிப் பாடகராகவே அறியப்பட்டார். நீல் நிதின் முகேஷ்தான் தற்போது நடிப்புத் துறையில் ஈடுபட்டுவருகிறார்.