‘விடாமுயற்சி’ படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் அஜித் டூப் இல்லாமல் நடித்தார் என்று ஆரவ் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘விடாமுயற்சி’. இதில் அஜித்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆரவ். அஜித்துடன் நடித்தது குறித்து ஆரவ் “கார் விபத்துக்குள்ளான காட்சி நன்கு திட்டமிடப்பட்ட காட்சி தான். ஆனால், எதிர்பாராத விதமாக விபத்து நடந்தது. விபத்துக்குப் பிறகு நடந்ததுதான் ஆச்சரியமான விஷயம். விபத்து நடந்த முப்பது நிமிடங்களுக்குப் பிறகு, படப்பிடிப்பை மீண்டும் தொடங்க முடிவு செய்து அந்த காட்சியை படமாக்கி முடித்தோம்.
பின்பு, அஜித் சார் என்னை தனியாக விடவில்லை. அவரே மருத்துவமனைக்கு என்னை அழைத்து சென்றார். என் எக்ஸ்ரே ரிப்போர்ட்டை பார்த்த பிறகுதான் அவர் நிம்மதி அடைந்தார். என்னைக் கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்டார். அவர் மன்னிப்பு கேட்டதும் நான் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகள் இல்லாமல் நின்றேன். அடுத்த நாளே, மீண்டும் ஷூட்டிங் வந்தார் அஜித் சார். படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பு ஆக்ஷன் காட்சிகளில் டூப் ஏதும் பயன்படுத்தாததை அவர் உறுதி செய்து கொண்டார்.
அவர் ரசிகர்கள் அவரிடம் எப்போதும் சிறந்ததை எதிர்பார்ப்பார்கள் என்பதால் ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதால் அவர் டூப் பயன்படுத்தவில்லை. அப்போதுதான், அவருக்கு பில்லியன் கணக்கான ரசிகர்கள் இருப்பதற்கான காரணத்தை என்பதை என்னால் உணர முடிந்தது” என்று தெரிவித்துள்ளார்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தினை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இதில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்திருக்கிறார். இதனை தமிழமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.