அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்தின் கதைக்களம் என்ன என்பது தெரியவந்துள்ளது.
அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இதன் டீசருக்கு இணையத்தில் பெரும் ஆதரவு கிடைத்தது. தமிழகத்தில் ஏப்ரல் 10-ம் தேதி வெளியீட்டுக்கான திரையரங்குகள் ஒப்பந்தம் இப்போதே தொடங்கப்பட்டுள்ளன. இதனிடையே இப்போது இந்தப் படத்தின் கதைக்களம் என்ன என்பது தெரியவந்துள்ளது.
“எதற்கும் பயப்படாத தாதா தனது குடும்பத்துடன் சமூகத்தில் நிம்மதியாக வாழ முயற்சி செய்கிறார். அதில் தனது இரக்கமற்ற வழிகளையும், வன்முறை வாழ்க்கையையும் மாற்ற நினைக்கிறார். ஆனால், அவரது இருண்ட கடந்த காலமும், மிருகத்தனமான செயல்களும் அவரை பின்தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அதை அவர் நேருக்கு நேர் சந்தித்து கடக்கிறார். இதில் பழிவாங்கல், விசுவாசம் மற்றும் அதிகாரத்தின் விலை ஆகியவை அடங்கிய கதை” என்று ‘குட் பேட் அக்லி’ படத்தின் கதைக்களம் என படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த கதைக்களம் வெளிநாட்டில் டிக்கெட் புக்கிங் இணையதளங்களுக்கு மற்றும் தணிக்கை பணிகளுக்கு கொடுத்த சினாப்சிஸ் மூலம் வெளியாகி இருக்கிறது. இந்தக் கதைக்களம் இணையத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. இது தானே ‘லியோ’ படத்தின் கதையும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.