அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர்கள் அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம். அதனைத் தொடர்ந்து மீண்டும் புதிய படமொன்றை தயாரிக்க தொடங்கியிருக்கிறார்கள். இதனை அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘AS 23’ என்று அழைத்து வருகிறார்கள்.
இதன் கதையினை ‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியிருக்கிறார். மாபெரும் வரவேற்பைப் பெற்ற பட இயக்குநரின் கதை என்பதால் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ‘போர் தொழில்’ படத்திலும் அசோக் செல்வன் தான் நாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய படத்தில் அசோக் செல்வனுக்கு நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இதன் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.